அன்னை தெரசா அணிந்த வெள்ளுடைக்கு பிராண்ட் அடையாளம்.. வணிக நோக்கத்தில் இனி பயன்படுத்த முடியாது
கருணையே உருவான அன்னை தெரசா அணிந்த நீல நிற கோடுகளை ஓரமாக கொண்ட வெள்ளை நிற புடவைக்கு பிராண்ட் அடையாளம் பெறப்பட்டுள்ளது.
கொல்கத்தா: உயிர் பிரியும் வரை தனது சேவையை இந்த உலக மக்களுக்காக கொடுத்து மகிழ்ந்த அன்னை தெரசாவை நினைத்தவுடன் அவர் அணிந்த புடவையும் அனைவரின் கண்ணிலும் நிழலாடும்.
நீல நிறக் கோடுகளை உடைய அந்த வெள்ளைப் புடவைக்கு அறிவுசார் உரிமை தற்போது பெறப்பட்டுள்ளது. இனி இந்தப் புடவையை யாரும் வணிக நோக்கத்தில் பயன்படுத்த முடியாது.
மிஷினரிஸ் ஆப் சேரிட்டியில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்னை தெரசா கட்டிய புடவை போன்றே கட்டி இருப்பார்கள்.
வணிக நோக்கத்தை தடுக்க..
கடந்த 2013ம் ஆண்டு தெரசாவின் வெள்ளை நிறப் புடவைக்கு அறிவுசார் உரிமை பெற கோரப்பட்டது. வணிக நோக்கத்தில் இதனை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இது செய்யப்பட்டதாக சேரிட்டியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
விரும்பினால் அனுமதி..
எனினும் யாராவது இந்த வகை சேலையை அணிய விரும்பினால் சேரிட்டிக்கு அனுமதி கடிதம் எழுதலாம். அதில் வணிக நோக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் இந்த சேலையை அணிய அனுமதியளிக்குமாம் சேரிட்டி.
அன்னையின் அடையாளம்
அல்பேனியாவை சேர்ந்த பெண் துறவியான அன்னை தெரசா 1948 ஆம் ஆண்டு வாடிக்கனிடம் இருந்து அனுமதி பெற்று, இந்த ஆடையையும், கழுத்தில் சிறியதொரு சிலுவையையும் அணிய தொடங்கினார். அதுவே அவருடைய அடையாளமாக மாறிவிட்டது.
தவறாக பயன்படுத்துவதை தடுக்க
நேபாளம் நாட்டில் அன்னை தெரசா பெயரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆனால் அந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று அன்னை தெரசா பெயரை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே அறிவுசார் உரிமை பெறப்பட்டுள்ளதாக சேரிட்டி கூறியுள்ளது.