41 ஆண்டுகளில் முதல்முறையாக அடைய முடியா நிலையில் எவரெஸ்ட் சிகர உச்சி
டெல்லி: 1974ம் ஆண்டுக்கு பிறகு 2015ம் ஆண்டில் தான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஒருவரால் கூட அடைய முடியவில்லை.
கடந்த ஆண்டு நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தில் பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கி கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 24 பேர் பலியாகினர். எவரெஸ்ட் சிகரத்தில் ஒரே நாளில் அதிகமானோர் பலியானது அன்று தான். முன்னதாக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 16 பேர் பலியாகினர்.
நிலநடுக்கத்தை அடுத்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை யாராலும் தொட முடியவில்லை. கடந்த 41 ஆண்டுகளில் கடந்த ஆண்டு தான் முதல் முறையாக ஒருவரால் கூட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முடியவில்லை.
எவரெஸ்ட் சிகரம்
ஏப்ரல் மாத நிலநடுக்கத்தை அடுத்து யாரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டாம் என்று நேபாள அரசு கூறவில்லை. ஆனால் மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மலை ஏறுபவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் திட்டத்தை கைவிட்டனர்.
நிலநடுக்கம்
மலையேறும் நபரான ஆலன் ஆர்னட் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். பலர் வாழ்க்கையை நடத்த என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். எந்த எச்சரிக்கையும் இன்றி திடீர் என்று வந்து சேதம் ஏற்படுத்துவது தான் நிலநடுக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிகர உச்சி
1953ம் ஆண்டில் இருந்து 1974ம் ஆண்டு வரை 7 முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மலை ஏறுபவர்கள் தொட்டுள்ளனர். 1974ம் ஆண்டு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
மலையேற்றம்
நேபாள நிலநடுக்கத்தை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானைச் சேர்ந்த நொபுகாசு குரிகிக்கு மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டது. அவர் நான்கு முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட முயற்சித்து தோல்வி அடைந்தார். இறுதியாக அக்டோபர் மாதம் 5வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முயற்சி செய்து தோற்றார். கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக அவர் தனது கையில் உள்ள 10ல் ஒன்பது விரல்களை இழந்தார்.