ம.பியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
லிதோரா: மத்திய பிரதேச மாநிலத்தில், ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம், லிதோரா கிராமத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கிருஷ்ணா. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வயல்வெளியில் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் 18 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் பாறைகள் இருந்ததால், மீட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் குழாய் மூலம் குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்தி வந்தனர்.
பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 9 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது.
குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.