100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்.. போராடி மீட்டும் பலியான சோகம்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிழந்தார்.
இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் சத்யம். நேற்று மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரதவிதமாக அருகில் இருந்த 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் ஜே.சி.பி. எந்திரங்களை பயன்படுத்தி, ஆழ்துளை கிணற்றுப் பகுதியை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்புப்பணி தொடர்ந்த நிலையில், சுமார் 12 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
எனினும் அவனது உடல்நிலை கவலைக்கிடமாக காணப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சத்யத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.