ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா!
போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்ப 3-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததால் தேர்தலை எதிர்கொள்கின்றன. 3 தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் இறந்ததாலும் தேர்தல் நடைபெறுகிறது.
25 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. பின்னர் அவர் பாஜகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகிவிட்டார். இதேபாணியில்தான் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார் சச்சின் பைலட். ஆனால் சச்சின் பைலட் பின்னர் சமாதானப்படுத்தப்பட்டால் ராஜஸ்தானில் கெலாட் அரசு தப்பியது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் பாஜகவுக்கு போன சிந்தியா தமது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
இதனிடையே இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய பிரதேசத்துக்கு சச்சின் பைலட் வருகை தந்தார். அவரை ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே; காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை என சிந்தியா கூறினார். இருப்பினும் சிந்தியா- சச்சின் பைலட் சந்திப்பு காங்கிரஸ் கட்சிக்கு உதறலை கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.