ம.பி: ராமர் கோவில் நிதி வசூல் பேரணி- மத மோதல் நிகழ்ந்த கிராமத்தில் 13 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நிதி வசூலிக்கும் பேரணியின் போது மோதல் நிகழ்ந்த சந்தன்கேடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு என கூறி 13 சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் வலதுசாரி அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூலிக்கும் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணி இந்தூர் அருகே சந்தன்கேடி கிராமத்துக்குள் சென்ற போது கடந்த டிசம்பர் 29-ல் அங்கு மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டது.
இந்த மோதல்கள் தொடர்பாக இதுவரை 27 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மோதல் நிகழ்ந்த சந்தன்கேடி கிராமத்தில் 13 சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டதால் பதற்றம் நிகழ்கிறது.
ஆனால் அரசு தரப்பில், சாலை பணிகளுக்காக இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இது தொடர்பாக ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டும் இருந்தது என கூறப்படுகிறது.
மேலும் இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் மத்திய பிரதேச மாநில அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை அப்பகுதியில் இருந்தது. அதனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன என்கிறது அரசு தரப்பு.