ம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி!
போபால்: மத்திய பிரதேசத்தில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.'
இதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் உத்தரவை காரணம் காட்டி சட்டசபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், வெள்ளிக்கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை கமல்நாத் அரசு நிரூபிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.
இதனிடையே வியாழக்கிழமை நள்ளிரவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கமல்நாத் அறிவித்துள்ளார். இச்சந்திப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே முதல்வர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை கமல்நாத் வெளியிடக் கூடும் என்று தகவல் வெளியாகியது. அதேபோல கமல்நாத், தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஆளுநரிடம் ராஜினாமா கடிதம்
இதனையடுத்து ஆளுநர் லால்ஜி டாண்டனை நேரில் சந்தித்தார் கமல்நாத். அப்போது ராஜினாமா கடிதத்தை கமல்நாத், ஆளுநரிடம் கொடுத்தார்.
Kamal Nath has submitted his resignation to Madhya Pradesh Governor Lalji Tandon. His letter states "All that has happened in Madhya Pradesh in the last two weeks is a new chapter in the weakening of democratic principles." pic.twitter.com/agzKBsdbxh
— ANI (@ANI) March 20, 2020