ஜனாதிபதி உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
டெல்லி: குடியரசு தலைவர் உரையின்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியுமான அகமது மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி உரை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியுமான அகமது மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. டாக்டர்கள் அவருக்கு பரிசோதனைகளுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் கேரள மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதியின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.