ம.பியில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பாஜக வழக்கு.. நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கு பதில் அளிக்குமாறு கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பலம் மொத்தம் உள்ள 230 இடங்களில் 99 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக உள்ளது.
இதன் காரணமாக பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். இதன்படி நேற்று ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி நேற்று சட்டசபை 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மெஜாரிட்டி இல்லாததால் கமல்நாத்துக்கு முதல்வராக நீடிக்க ஒரு நிமிடம் கூட தகுதி இல்லை. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் நேற்று எம்எல்ஏக்களுடன் முறையிட்டார். இதையடுத்து இன்றைக்குள் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்றைக்குள் சட்டசபையில் கட்டாயம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டன் கெடு விதித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் மத்திய பிரதேச சபாநாயகருக்கு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜகவின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன் வழக்கை நாளை விசாரிப்பதாக தள்ளி வைத்தது. இதனால் நாளை முடிவு தெரிந்துவிடும்.