ம.பி. கமல்நாத் அரசுக்கு அக்னி பரீட்சை - நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அதிரடி உத்தரவு!
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவை வளைத்து அவரை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்தியுள்ளது.
மேலும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கடிதத்தையும் ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் பாஜகவினர் கொடுத்துள்ளனர். ஆனால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போலீஸ் கஸ்டடியில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்கின்றது காங்கிரஸ்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தயார்
இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டனை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் கமல்நாத். அப்போது தமது அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாகவும் தேவைப்பட்டால் சட்டசபையை பெரும்பான்மையை நிரூபிக்கவும் தயார் என 3 பக்க கடிதம் ஒன்றை கொடுத்தார் கமல்நாத். இதனால் கமல்நாத் அரசுக்கு ஆளுநர் எந்த நேரத்திலும் உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
சனிக்கிழமை நள்ளிரவு அறிவிப்பு
இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவில் சட்டசபையில் கமல்நாத், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் அனுப்பிய கடிதத்தில், 22 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமாவை சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக அறிந்தேன். இது தொடர்பாக ஊடகங்களிலும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து ஊடகங்களிலும் இதுதொடர்பாக வெளியான செய்திகளையும் கவனித்தேன்.
நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு
மேலும் 22 எம்.எல்.ஏக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அரசியல் சாசனத்தின் 174, 175 (2) வது பிரிவின் கீழ் மார்ச் 16 திங்கள்கிழமையன்று சட்டசபையை கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. என்னுடைய உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். இதன் பின்னர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். 6 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய கமல்நாத் அனுப்பி வைத்த பரிந்துரையும் ஏற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ம.பி.யில் சட்டசபை பலம்
மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 230 எம்.எல்.ஏக்கள் இடம் உள்ளது. 2 இடங்கள் காலியாக இருந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 228. இந்நிலையில் அரசுக்கு எதிராக போர்க்கொடிய தூக்கி ராஜினாமா கடிதம் அனுப்பியவர்களில் 6 அமைச்சகர்களின் கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 222 ஆக குறைந்துள்ளது.
கமல்நாத் அரசு தப்புமா?
எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்குவதற்கு முன்னர் காங்கிரஸுக்கு 114 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ, பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியாவின் கலகலகத்துக்குப் பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசுக்கான ஆதரவு குறைந்துள்ளது. ஆகையால் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் அரசு தப்புமா? அல்லது ஆட்சியை கவிழ்க்க நினைத்த பாஜகவின் முயற்சி வெல்லுமா? என்பது தெரியவரும்.