நாடாளுமன்றம் முடக்கம்..சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பி அளிக்கும் எம்.பி. !
பிஜூ ஜனதாதளம் எம்.பி. ஒருவர் நாடாளுமன்றம் முடங்கும்போதெல்லாம் தனது சம்பளத்தின் ஒருபகுதியை திருப்பு செலுத்தி வருகிறார்.
டெல்லி: நாடாளுமன்றம் எப்போதெல்லாம் முடங்கி போகிறதோ அப்போதெல்லாம் தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும், தினசரி படியையும் திருப்பி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.பி., பைஜெயந்த் ஜே பாண்டா.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால், அந்த பிரச்சினையை முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அவையில் எழுப்பி வந்தன.
இரு அவைகளிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கோரி கடும் அமளியிலும் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இருஅவையின் அலுவல்கள் முற்றிலும் முடங்கி போனது. இதனால் நாட்டு மக்களின் வரிப்பணம் வீணானது.
இந்நிலையில் நாடாளுமன்றம் எப்போதெல்லாம் முடங்கி போகிறதோ அப்போதுதெல்லாம் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை திரும்பி தருவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.பி., பைஜெயந்த் ஜே பாண்டா. இவர் ஒடிசா மாநிலம், கேந்திரபாரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
Winter session of Parlmt ends after passing the disabilities bill. Phew! As usual, i'll be returning salary proportional to time wasted/lost
— Baijayant Jay Panda (@PandaJay) December 16, 2016
இது குறித்து அவர் கூறுகையில், அமளி காரணமாக பாராளுமன்றம் எவ்வளவு நேரம் முடங்குகிறதோ, அதற்கு ஏற்ப எனது சம்பளத்தின் ஒரு பகுதியையும், தினசரி படியையும் திரும்ப செலுத்தி வருகிறேன். இதை நான் பல ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.