போக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை
போக்ஸோ சட்டத்தில் முதல் முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
போபால்: போக்ஸோ சட்டத்தின் புதிய விதியாக பலாத்காரம் செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கினால்தான் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
அதுமட்டுமல்லாது காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, உ.பி.யில் உன்னவ் பகுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு உள்ளிட்டவற்றில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதற்காக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
சட்டமாக மாறியது
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அப்போது சிறுவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப்படும் போக்ஸோ சட்டத்தில் தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வழி வகை செய்யும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு அந்த மசோதா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டமாக மாறியது.
குற்றப்பத்திரிகை
இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பாகீரத் பாட்டீல் (40) என்பவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் 3 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
46 நாட்களில் முதல் வழக்கு
இதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுதன்சூ சாக்சேனா குற்றவாளி பாட்டீலுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகு பலாத்கார வழக்கை 46 நாட்களில் விசாரணை நடத்தி உச்சகட்ட தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.