பாஜக எம்பிக்கள் நொறுக்குத் தீனி தின்னத்தான் லாயக்கி.. காங்கிரஸ் கடும் விமர்சனம்
கல்புர்கி: கர்நாடக பாஜக எம்பிக்கள் நொறுக்குத் தீனி சாப்பிடத்தான் பிரயோஜனம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே (சிட்டப்பூர் எம்எல்ஏ) நேற்று கூறுகையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு 25 எம்பிக்களும், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
ஆனால் அவர்கள் டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடத்தான் பிரயோஜனம். அவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள்.
பாஜக மேலிடம்
அவர்களுக்கு தைரியம் இல்லை. பாஜக மேலிட தலைவர்கள் சொல்வதை கைகட்டிக் கொண்டு கேட்டுவிட்டு திரும்பி வருகிறார்கள். இதற்காகத்தான் கர்நாடக மக்கள் அவர்களை எம்பிக்களாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்களா?
ஊர் சுற்றும்
பாஜகவினர் மக்களை ஏமாற்றி ஊர் ஊராக சுற்றுவதை முதல் நிறுத்த வேண்டும். மக்கள் கையில் பணம் இல்லை. அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். பாஜகவினர் சிலர் அமைச்சராகவோ முதல்வராகவோ விரும்புகிறார்கள். முதல்வர் எடியூரப்பாவோ மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னைப்பற்றியே பெருமை பேசி வருகிறார்.
பொய் வாக்குறுதி
கல்யாண கர்நாடகா (ஹைதராபாத் கர்நாடகா) மக்களை முதல்வர் எடியூரப்பா ஏமாற்றி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக கூறி வருகிறது. அதற்கு பின்னால் பெரிய சதி திட்டமே இருக்கிறது. ஒரே தேர்தல் வைத்தால் ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள்.
நிவாரணம்
அது நடக்கவே நடக்காது. மாநில அரசு நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஊதியம் கொடுப்பதற்கே நிதி இல்லை. எனவே மாநிலத்தின் நிதிநிலை குறித்து எடியூரப்பா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரம் வழங்கப்படவில்லை என்றார் கார்கே.