நாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்!
நாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம் நடைபெற்ற போது வெளியே பெரிய விருந்தை வெளுத்து வாங்கிய உறுப்பினர்கள்.
டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வெளியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை உறுப்பினர்கள் சுவைத்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்றைய தினம் கேண்டீனுக்கு விடுமுறை என்பதால் உறுப்பினர்களுக்கு வெளியிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது. பொதுவாக அவை நடக்கும் போது வெளியில் இருந்து எந்த உணவு பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.
ஆனால் சிறப்பு அனுமதி பெறப்பட்டு உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. எனினும் அவை முடிந்த பிறகும், எம்பிக்கள் அவையை விட்டு வெளியே சென்ற பிறகுதான் குப்பைகளை அள்ளி செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் என்னென்ன உணவுகளை ருசித்தனர் என்பது குறித்து மெனு வெளியாகியுள்ளது. அதில் சிக்கன் மசாலா, மீன் வறுவல், ஆட்டுக்கால் சூப், பன்னீர் மட்டர் மசாலா, ஜீரா சாதம், தால் தட்கா, ரைத்தா, தவா ரொட்டி ஆகியவற்றை உறுப்பினர்கள் சுவைத்தனர்.