ஆளுக்கு 4 குழந்தைகள் பெத்துக்கங்க.. இந்துப் பெண்களுக்கு பாஜக எம்பி "அட்வைஸ்"!
மீரட்: இந்து பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாக்ஷி மகராஜ். இவர் நேற்று மீரட் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், " 4 மனைவிகளை கட்டிக் கொண்டு 40 குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் கலாச்சாரம் இந்தியாவுக்கு சரிபட்டு வராது.
அதற்கு பதிலாக இந்து பெண்கள் அனைவரும் குறைந்த பட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். பசு வதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் ஆகியவற்றை விரைவில் மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.
அதன்பிறகு யாராவது பசு வதையில் ஈடுபட்டாலோ, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். உலகில் உள்ள எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க முடியாது" என்றார்.
பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசும் இது போன்ற அரசியல் தலைவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.