கெஜ்ரிவாலுக்கு முன்னாடி நாங்கதான் ஆரம்பிச்சோம் 'கோபால்'... போபாலிலிருந்து செளகான் அலறல்!
போபால்: லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துத் தகவல் தர தொலைபேசி எண்ணை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆரம்பித்துள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இதேபோன்ற எண்ணை தாங்கள் எப்போதோ மக்களுக்கு வழங்கி விட்டதாக ம.பி. பாஜக முதல்வர் சிவ்ராஜ் செளகான் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கலாம். அவர்களை மக்களே கையும் களவுமாகப் பிடிக்க தாங்கள் ஆலோசனை வழங்குவோம் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ஹெல்ப்லைன் இப்போது டெல்லி மக்களிடையே பிரபலமாகி விட்டது. தொலைபேசி அழைப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் இப்படி ஒரு ஹெல்ப்லைன் ஏற்கனவே தங்களது மாநிலத்தில் இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில் பல காலத்திற்கு முன்பே நாங்கள் இப்படி ஒரு ஹெல்ப்லைனை ஆரம்பித்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எதற்கும் அந்த எண்ணை மறுபடியும் தருகிறேன்.. இதுதான் அந்த எண்..9009992323... நோட் பண்ணிக்குங்க என்று கூறியுள்ளார் செளகான்.