ம.பி. மினி பொதுத் தேர்தல்- 24 தொகுதி இடைத்தேர்தல்- குவாலியர் கோட்டையை தக்க வைப்பாரா சிந்தியா?
போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனா காய்ச்சலை விட 24 தொகுதி இடைத்தேர்தல் ஜூரம்தான் அலைமோதுகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸுக்கும் வாழ்வா? சாவா? என அனல் பறக்க காத்திருக்கிறது 24 தொகுதி இடைத்தேர்தல்கள்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளுடன் அமர்க்களமாக ஆட்சி நடத்திய காங்கிரஸுக்கு ஜோதிராதித்யா சிந்தியா வடிவில் சோதனை ஏற்பட்டது. ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸைவிட்டு விலகினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் கூண்டோடு காங்கிரஸ் ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. நாடே கொரோனா துயரத்தில் இருந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தில் சர்ச்சைகளுக்கு இடையே பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். ஏற்கனவே காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேர் மறைவால் 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதனால் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 24 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு?
மும்முனைப் போட்டி
கொரோனா லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணையம், 24 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை அறிவிக்கவில்லை. ஆனால் மத்திய பிரதேச மாநில அரசியலில் இடைத்தேர்தல் பணிகள் ஜரூராகிவிட்டன. இந்த 24 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இந்த 22 தொகுதிகளில் 16 தொகுதிகள், குவாலியர் பிராந்தியத்தில் வருகிறது. குவாலிய பிராந்தியம் சிந்தியா குடும்பத்தின் கோட்டை. அதேநேரத்தில் தலித்துகளின் வாக்கு வங்கிகளும் தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருக்கின்றன. இதனை அடிப்படையாக வைத்து பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி என அறிவித்துள்ளது. இதனால் 24 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.
குவாலியர் கோட்டை
காங்கிரஸைப் பொறுத்தவரை சிந்தியா குடும்பத்தினர் யாருமே இல்லாத நிலையில் குவாலியர் கோதாவில் குதிக்கிறது. இது நிச்சயம் மிகப் பெரும் சவாலாகத்தான் இருக்கப் போகிறது காங்கிரஸுக்கு. குவாலியர் பிராந்திய வாக்காளர்கள் தங்களது சிந்தியா மகாராஜா குடும்பத்தினர் எந்த சின்னத்தில் நின்றாலும் வாக்களிக்கக் கூடியவர்கள். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜ்யசபா எம்பியாகிறார். இருந்தபோதும் சிந்தியா ஆதரவு வேட்பாளர்களையும் வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பாஜகவுக்கு சிக்கல்
குவாலியர் பிராந்தியத்தில் பாஜகவுக்கு இன்னொரு இடியாப்ப சிக்கலும் காத்திருக்கிறது. பாஜகவின் அரைடஜன் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் குவாலியர் பிராந்தியத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். இவர்கள் அத்தனைபேரையும் அதிருப்தி ஏதும் இல்லாமல் சமாளித்துக் கொண்டு காய்நகர்த்துவது என்பதே பாஜகவுக்கு மிகப் பெரிய பணி. இப்போது சிந்தியாவும் இந்த ஜோதியில் கலந்திருக்கிறார். இதனை பாஜக லாகவமாகவே கையாளப் பார்த்தாலும் காங்கிரஸ், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கவே செய்கிறது.
குட்டையில் மீன்பிடிக்கும் காங்கிரஸ்
கமல்நாத் அரசு கவிழ்க்கப்படுகிற நிலையில் பாஜக அதிருப்தியாளர்களை வளைத்துப் போட்டு ஆட்சியை தக்க வைக்க அவர் முயற்சித்தார். இப்போதும் கூட காங்கிரஸ் கட்சி அதே வியூகத்தை கையில் எடுக்கும் என்றே தெரிகிறது. 22 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக வென்றவர்களே மீண்டும் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட இருக்கின்றனர். இதனால் உள்ளூர் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைவது இயல்பு. இவர்களை வைத்து பாஜகவுக்கு குடைச்சல் தரும் ரூட்டை தயார் செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். மத்திய பிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி.. அத்தனை அதகளங்களும் அரங்கேற காத்திருக்கிறது!