சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி!
போபால்: பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் குண்டர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களை ஒடுக்க சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.
இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என கூறிக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் சம்பவங்கள் வட இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மாட்டிறைச்சி வைத்தாலும் சாப்பிட்டாலும் குற்றம் என்கிற சூழலை இந்த பசுபாதுகாப்பு குண்டர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் அக்லாக் எனும் முதியவரை பலி கொண்டது முதல் இக்கும்பலின் வெறியாட்டம் அடங்கவில்லை. இதனால்தான் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், பசுபாதுகாப்பு குண்டர்களை கடுமையாக எச்சரித்திருந்தது.
கேரளாவில் நேற்று கூட பசுபாதுகாப்பு குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முதலாவது மாநிலம் என்கிற பெருமைக்குரியதாகிறது மத்திய பிரதேசம்.