ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பில் காத்திருக்கும் மூக்குடைப்பு? 6 பாஜக எம்எல்ஏக்களே தடாலடி பல்டியாமே?
போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் வெல்வோம் என்கிறது காங்கிரஸ். பாஜகவின் 6 எம்.எல்.ஏக்கள் கமல்நாத் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அமைக்க முடியாத விரக்தியில் காங்கிரஸுக்குள் குழப்பம் விளைவிக்கிறது பாஜக. காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்யா தலைமையிலான ஒரு குழுவை உடைத்து கமலநாத் அரசை கவிழ்க்க நினைக்கிறது பாஜக.
இதற்காக தாங்கள் ஆளும் கர்நாடகாவுக்கு காங்கிரஸ் எம். எல். ஏக்களை கடத்தி சிறை வைத்துள்ளது பாஜக. இவர்கள் அனைவரும் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றனர் என்கிறது கர்நாடகா காங்கிரஸ். இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்கள் இருக்கும் இடம்.. மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா.. என்ன நடந்தது, எப்படி பரவியது?
கர்நாடகாவில் காங். எம்.எல்.ஏக்கள்
அதேநேரத்தில் நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்; ஆனால் கர்நாடகாவில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள எங்களது எம்.எல்.ஏக்களை மீட்டு தாருங்கள் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கிறது காங்கிரஸ். இதனிடையே ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் தஞ்சமடைந்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போபால் திரும்பினர்.
ஆதரவு உள்ளது
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்,எல்.ஏக்கள், சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பது நாளை தெரிய வரும் என கூறியுள்ளனர். மேலும் ஆட்சியை தக்க வைப்பதற்கான எம்..எல்.ஏக்கள் ஆதரவு கமல்நாத்துக்கு இருக்கிறது என கூறியுள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏக்கள் பல்டி
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 6 முதல் 9 எம்.எல்,.ஏக்கள் கமல்நாத் அரசுக்கு ஆதரவு தர வாய்ப்புள்ளது என கூறுகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். அப்படி பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கிடைத்துவிட்டால் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பும். பாஜகவுக்கு மூக்குடைப்பாக அமைந்துவிடும்.
மூக்குடைப்பு யாருக்கு?
ஏற்கனவே அருணாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகா வரை ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை வளைப்பது, ராஜினமா செய்ய வைப்பது என மிரட்டியே அதிகாரத்தை அபகரித்து வருகிறது பாஜக. பாஜகவின் இந்த ஆட்சி வெறி வேட்டைக்கு கர்நாடகாவின் குமாரசாமி இரையானதைப் போல கமல்நாத் பலியாவாரா? அல்லது பாஜக இனியும் இதுபோன்ற சித்து விளையாட்டை தொடராத வகையில் செவுளில் அடிவிடுவாரா? என்பது நாளை தெரிந்துவிடும்.