சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை: சோலி சொரப்ஜி
டெல்லி: சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார். மேலும் நல்ல காரணங்களுக்காக ஆளுநர் பதவியேற்பை ஒத்தி வைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது வேடிக்கையான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை அளித்து, அது ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
ஆளுநரால் ஏற்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற முடியாது, அதற்கு சட்டத்தில் இடமில்லை. அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுவது மரபு. அசாதாரண சூழலில் அவர் முடிவெடுக்கலாம்.
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை. இந்நிலையில், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது.
தீர்ப்பு வருவதற்கு வாரங்களோ, மாதங்களோ இல்லை. வரும் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் காத்திருக்கலாம். நல்ல காரணங்களுக்காக ஆளுநர் பதவியேற்பை ஒத்தி வைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.