டோணியின் எளிமை பாராட்டுக்குரியது.. முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் புகழாரம்!
டெல்லி: டோணியின் தன்னடக்கம் மற்றும் நேர்மை பாராட்டுக்குரியது என்று முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கிரண் மோர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எம்.எஸ். டோணி: தி அன்லோட் ஸ்டோரி என்ற பெயரில் இந்தியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.
டோணியாக நடிக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட், டோணியின் மேனரிசங்களை அப்படியே வெளிப்படுத்தும் வகையில் அதனை கற்றுக்கொண்டுள்ளார். மேலும் டோணியின் சில தனித்துவமான ஷாட்களைகளையும் விளையாட சுஷாந்த் சிங் ராஜ்புட் கற்று கொண்டுள்ளார்.
குறிப்பாக அனைவராலும் அதிகம் பேசப்படும், ஹெலிகாப்டர் ஷாட்களை விளையாட, தீவிர பயிற்சி மேற்கொண்டார் என அவருக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிரண் மோர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இது அற்புதமான கதை. என்னை பொறுத்தவரை டோணி ஒரு ஆராய்ச்சி பாடம். இது ஒரு சிறந்த கதை மற்றும் அவரது பின்புலம் நம்ப முடியாத ஒன்று. இந்திய அணியின் கேப்டன்களாக இருந்தவர்கள் எல்லாம் மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இருந்து தான் வந்துள்ளனர்.
பின்தங்கிய மாநிலத்தில் இருந்து விளையாட்டின் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற மிக உயர்ந்த சிகரத்தை அடைந்தவர் டோணி. அவரின் தன்னடக்கம் மற்றும் நேர்மை என்றுமே பாராட்டுக்குரியது என்கிறார் கிரண் மோர்.