'குறை ஒன்றும் இல்லை'... எம்.எஸ்.ஸுக்கு கெளரவம் தந்த கூகுள் டூடில்!
டெல்லி: மறைந்த கர்நாடக இசை மேதை பாரதரத்னா இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 97வது பிறந்த நாளையொட்டி கூகுள் டூடில் மூலம் கெளரவம் கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.
தம்புராவைக் கையில் பிடித்தபடி எம்.எஸ். அமர்ந்திருக்கும் படம் கூடவே தபலா, மிருதங்கம், கடம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன இந்த டூடில் படத்தில்.
எம்.எஸ்.ஸின் காந்தர்வக் குரல் மட்டும்தான் இந்த படத்தில் மிஸ்ஸிங்... பார்க்கவே படு ரம்யமாக இருக்கிறது இந்த டூடில்.
கர்நாடக இசைக் குயில்
கர்நாடக இசைக் குயிலாக பன்னெடுங்காலம் பாரத மக்களை மட்டுமல்லாமல் பார் புகழத் திகழ்ந்து வந்தவர் எம்.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி.
மதுரையிலிருந்து வந்த மாங்குயில்
மதுரையைச் சேர்ந்தவரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலுக்கு மயங்காத உள்ளங்களே கிடையாது.
குறை ஒன்றும் இல்லை...
அவரது குரலில் இந்த நொடியில் கூட எங்காவது ஒரு இடத்தில்.. ஒரு இடத்தில் அல்ல ஓராயிரம் இடத்தில் இந்தப் பாடல் ஒலித்தபடியே இருக்கும். குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று அவர் பாடும்போது உருகாத உள்ளம் உண்டோ.. கலங்காத கண்கள் உண்டோ...
97வது பிறந்த நாள்
மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 97வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவரது படத்தைப் போட்டு கெளரவம் சேர்த்துள்ளது கூகுள் டூடில்.
விருதுகளுக்குக் கெளரவம் கொடுத்த எம்.எஸ்.
எம்.எஸ். வாங்காத விருதுகளே கிடையாது. உயர்ந்தபட்சமாக இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளார். ஆசியாவின் உயரிய விருதான ரமன் மக்சேசே விருதையும் பெற்றுள்ளார்.
10 வயதில் பாட்டு
10 வயதிலேயே பாடத் தொடங்கியவர் எம்.எஸ். 16வது வயதிலேயே மேடை ஏறி விட்டார்.
பல மொழிகளில் புலமை
தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம் உள்பட பல மொழிகளில் புலமை பெற்றவர்.
ஐ.நா. அவையிலும் ஒலித்த எம்.எஸ்.
ஐ.நா. பொதுச் சபையிலும் எம்.எஸ்.ஸின் குரல் ஒலித்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா... கண்ணன் மட்டுமா, தனது குரலோசை மூலம் இந்த கானக் குயிலும்தான்!.