எம்பி பதவியை ராஜினாமா செய்தார் முகுல்ராய்... பாஜகவில் சேரத் திட்டமா?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல்ராய் தன்னுடைய எம்பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முகுல்ராய் இன்று தனது எம்பி பதவிக்கான ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரான துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவிடம் ஒப்படைத்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சயில் மம்தா பானர்ஜிக்கு 2வது பெரிய தலைவராக இருந்தவர் முகுல் ராய். இவர் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை 6 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கடந்த மாதம் மம்தா விலக்கி வைத்தார்.
இந்நிலையில் முகுல்ராய் இன்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ளும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்து பின்னர் ஊடகங்களிடம் தெரிவிப்பதாக முகுல்ராய் கூறியுள்ளார். எனினும் அவர் பாஜகவில் சேருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ஆனால் தான் பாஜகவில் சேருவேனா அல்லது தனிக்கட்சித் தொடங்குவேனா என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்று முகுல் ராய் கூறியுள்ளார்.