திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் இருந்து முகுல்ராய் நீக்கம்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மூத்த தலைவரான முகுல் ராய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மமதா பானர்ஜிக்கு அடுத்ததாக நம்பர் 2 நிலையில் இருந்தவர் முகுல்ராய். அண்மையில் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டார் முகுல் ராய்.
இதனைத் தொடர்ந்து முகுல் ராயை கட்சியில் இருந்து ஓரம்கட்டத் தொடங்கினார் மமதா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் முகுல் ராய் மட்டுமே இருந்து வந்தார். அந்த பதவிக்கு எம்.பி. சுப்ரதா பாக்சியை நியமித்து முகுல் ராயின் முக்கியத்துவத்தைக் குறைத்தார் மமதா.
அதேபோல் நாடாளுமன்றம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸின் பிரதிநிதியாக முகுல் ராய் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் திரிணாமுல் கொறாடாக்களான கல்யாண் பானர்ஜியும் ஓ பிரையனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறி முகுல்ராய் தனிக்கட்சியைத் தொடங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப்பட்டார்.
மேலும் அவர் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி மற்றும் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சந்திப்புகளின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் முகுல் ராய் இணையக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் முகுல்ராய் வகித்து வந்த பொதுச்செயலர் பதவியும் இன்று பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைவது உறுதியாகி இருக்கிறது.