மும்பையில் ஹெச்.டி.எப்.சி. தலைவர் தீபக் பரேக், ஜெத்மலானிக்கு ஓட்டு இல்லை!!
மும்பை: 6வது கட்ட லோக்சபா தேர்தலில் மும்பையில் ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். அதே நேரத்தில் ஹெச்.டி.எப்.சி. தலைவர் தீபக் பரேக், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
லோக்சபா தேர்தலுக்கான 6வது கட்ட வாக்குப் பதிவு 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது.
மும்பையில் ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானி முதல் நபராக வாக்களித்தார். அதேபோல் நடிகர் ராகுல் போஸும் வாக்களித்தார்.
வித்யா பாலன் மும்பையில்
நடிகை வித்யாபாலனும் காலையிலே வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யாபாலன், நாட்டில் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் எனில் வாக்களிக்க வேண்டியது என கடமை என்பதால் வாக்களித்தேன் என்றார்.
இதேபோல் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் நடிகர்கள் சோனம் கபூர், சன்னி தியோல் வாக்களித்தனர்
நாராயணசாமி
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வாக்குப் பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றார். மேலும் புதுவையில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
சிவசேனா- மகா.நிர்மான் மோதல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் விவகாரத்தில் சிவசேனா தொண்டர்களும், மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தொண்டர்களும் இன்று மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹெச்.டி.எப்.சி. தலைவருக்கு ஓட்டு இல்லை!!
மும்பையில் வாக்களிக்க சென்ற ஹெச்.டி.எப்.சி. வங்கி தலைவர் தீபக் பரேக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் வாக்களிக்காமல் திரும்பி நேரிட்டது.
மும்பை வடகிழக்கு பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேதா பட்கரும் வாக்களித்தார்.
ராஜ்தாக்கரே
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே முற்பகல் 11 மணியளவில் தமது குடும்பத்தினருடன் மும்பையில் வாக்களித்தார்.
டெண்டுல்கர்..
மும்பையில் பகல் 11.45 மணியளவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியுடன் வந்து வாக்களித்தார். இன்று சச்சினுக்குப் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராம்ஜெத்மலானி பெயரும் இல்லை..
இதேபோல் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவரும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.