முல்லை பெரியாறு: கேரளாவிற்கு பதிலடியாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறது தமிழகம்
டெல்லி: கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம், தமிழகத்தின் நடவடிக்கைதான் என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலளிக்க தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி தண்ணீர் இருக்கும் போது படிப்படியாக தண்ணீரை திறந்துவிட்டு இருந்தால், இடுக்கி அணையில் இருந்து மெல்ல மெல்ல நாங்களும் தண்ணீரை திறந்திருக்க முடியும். ஆனால், தமிழகம் 142 அடி வரை காத்திருந்து அதன் பிறகு தண்ணீர் திறந்துவிட்டதால், மொத்தமாக இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டியதாயிற்று. இதன் காரணமாக கேரளாவில் பெரும் அழிவு ஏற்பட்டது" என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்தது.
இதனிடையே, இன்று முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், உத்தரவிட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக வைத்திருக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 6ம் தேதிக்குள் கேரளாவின் குற்றச்சாட்டு குறித்து தமிழகம் பதிலளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது. அதில், கேரள அரசின் நிர்வாக திறமையின்மைதான் வெள்ளத்திற்கு காரணம் என்றும், முல்லை பெரியாறு அணை திறக்கப்படும் முன்பே கேரளாவில் வெள்ளம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டதையும், குறிப்பிட்டு, ஆதாரங்களோடு உச்சநீதிமன்றத்தில், தகவல்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.