முல்லைப் பெரியாறு: துணைக் குழு முடிவை இரு அரசுகளும் அமல்படுத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்த வழக்கில் அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு பரிந்துரையை இரு மாநில அரசும் ஏற்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராயின் வழக்கு தொடுத்தார். அவசர வழக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை விசாரித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதாவது அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையை பார்வையிட வேண்டும். இரண்டு பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும். அதன்பின் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்
2 குழுக்களும் எடுக்கும் முடிவை இரு மாநில அரசும் செயல்படுத்த வேண்டும். அந்த குழுவின் பரிந்துரையை இரு மாநில அரசும் ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.