மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது உண்மையே: பாக். விசாரணை அதிகாரி ஒப்புதல்
இஸ்லாமாபாத்: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது என்று அந்த நாட்டுவிசாரணை அதிகாரியாக இருந்த தாரிக் கோஷா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டு கொல்லப்பட்டனர். நீண்ட விசாரணைக்கு பின்பு அஜ்மல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் லஸ்கர்-இ-தொய்பா தளபதி சகிஉர் ரகுமான் லக்வி. மும்பை தாக்குதல் தொடர்பாக 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்தது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து உள்ளது. இந்நிலையில் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலே பயிற்சி அளிக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரி தாரிக் கோஷா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் டான் பத்திரிகையில் தாரிக் கோஷா எழுதியுள்ளதாவது:
பாகிஸ்தானில் இருந்தே மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் உண்மையை சந்திக்கவேண்டும் மற்றும் தவறுகளை ஒப்புக் கொள்ள கொள்ளவேண்டும். மும்பையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களை நீதியின் முன் கொண்டுவர அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
இதுதொடர்பான விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. விசாரணையானது விரைந்து முடிக்கப்படவேண்டும். இத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பகுதியில் பயிற்சி அளித்து அங்கிருந்தே இந்தியாவுக்கு கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தினர்.
மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட போது, கராச்சியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்தே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையும் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பாகிஸ்தான் நீதியின் கீழ் கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு தாரிக் கோஷா எழுதியுள்ளார்.