26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்- உயிரிழந்த 166 பேர் நினைவிடத்தில் அஞ்சலி #MumbaiAttacks
மும்பை: பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் அதிபயங்கர தாக்குதலை நடத்தினார்கள்.
கடல் மார்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். மும்பை நகரையே ரத்தத்தில் குளிக்க வைத்த அந்த நாளை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. நான்கு நாட்கள் மும்பையை தங்கள் கட்டுப்பவைத்திருந்தனர்.
வீரமரணம்
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை அதிகாரிகளில் தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர் உள்பட பலரும் அடங்குவர்
அஜ்மல் கசாப் தூக்கு
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது அவர் ஒப்புக் கொண்டார். நீண்ட விசாரணைக்கு பின்பு அஜ்மல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டான்.
8ம் ஆண்டு நினைவு தினம்
அந்த தாக்குதலின் 8வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
தீவிரவாத தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே அஞ்சலி செலுத்தினார்.
பலத்த பாதுகாப்பு
மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், மும்பாதேவி கோவில், ஹாஜி அலி தர்கா, பாந்திரா மலைமாதா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி சந்தேகப்படும் வகையில் வருபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.