வேலையை முடி, கசாப் போன்று உன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறோம்: ஆட்டோவில் பேசிய நபர்
மும்பை: மும்பையில் தனது ஆட்டோவில் ஏறிய 3 பேர் தீவிரவாத தாக்குதல் நடத்துவது பற்றி பேசியதை கேட்ட ஆட்டோ டிரைவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஆட்டோ ஓட்டி வருபவர் 34 வயதான சவுரப் பால்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது ஆட்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை சியோன் மேம்பாலம் அருகே 3 பேர் ஏறியுள்ளனர். அவர்கள் மூன்று பேரும் பெரிய பெரிய சூட்கேஸ் வைத்திருந்தனர்.
ஆட்டோவில் ஏறிய அவர்கள் மலாய் மற்றும் பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசியுள்ளனர். சவுரப் மலேசியாவிலும், பஞ்சாபிலும் வேலை செய்ததால் அவருக்கு அந்த மொழிகள் தெரியும். அவர் பஞ்சாபில் இருந்தபோது அவருடன் தங்கியிருந்த நபர் பாகிஸ்தான் எல்லையோர பகுதியைச் சேர்ந்தவர். அவர் பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசுவார்.
இந்நிலையில் ஆட்டோவில் இருந்தவர்கள் அஜ்மல் கசாப் பற்றி பேசியுள்ளனர். கவலைப்படாதே வேலை முடிந்ததும் உனது குடும்பத்தாரை நாங்கள் கவனித்துக் கொள்வோம். ஆக்கா இருக்கிறார் அல்லவா. நாங்கள் தான் கசாப் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறோம் என்று அந்த மூன்றில் ஒருவர் யாரிடமோ போனில் தெரிவித்துள்ளார்.
அவர்களை ஐரோலி டோல் பிளாசா பகுதியில் இறக்கிவிட்ட சவுரப் இது குறித்து முலுந்த் போலீசாருக்கு தகவல் அளித்தார். சவுரப் தெரிவித்த அடையாளங்களை வைத்து போலீசார் மூன்று பேரின் உருவங்களை வரைந்துள்ளனர். அவர்களை மும்பையின் பட்டிதொட்டி எல்லாம் போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று மும்பை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.