மும்பையில் வெள்ளம் வடிகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது... ரயில் போக்குவரத்து துவக்கம்
மும்பை: மும்பையில் கடந்த இரு தினங்களாக கொட்டி வந்த கனமழை சற்றே ஓய்ந்துள்ளதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மின்சார ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன.
மும்பையில் சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை வியாழக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளிலும், குர்லா, அந்தேரி, தாராவி, பாரேல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.
இந்த மழை வெள்ளத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. கன மழையினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க நேரிட்டது. குடிசைப் வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மின்சார ரயில்களும் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மழை வெள்ள சேதங்களை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்தார்.
10 நாட்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று காலை முதல் மழை சற்றே ஓயத்தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.