அடக்கடவுளே... நம்ம கிரிக்கெட் கடவுள் சச்சினும் குடிநீர்க் கட்டணம் பாக்கி வச்சிருக்காராமே....
மும்பை: சுமார் 2 லட்சம் பேர் குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மறைந்த பால்தாக்கரே உள்ளிட்டவர்களின் பெயர்களும் உள்ளது தான்.
மும்பை நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வரும் மாநகராட்சி, குடிநீர் கட்டணம் செலுத்த தவறியவர்கள் பட்டியலை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் சுமார் 2 லட்சம் பேர் குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப்பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் உட்பட பலப் பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓய்வு....
கிரிக்கெட் ரசிகர்களால் ‘கிரிக்கெட் கடவுள்' எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்தாண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘கைகளை சுத்தமாகக் கழுவுங்கள்' என்ற பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
மீண்டும் சர்ச்சை...
வரும் 4ம் தேதி சச்சினுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் குடிநீர் கட்டணம் செலுத்தத் தவறியவர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நீங்களுமா...?
சச்சின் தவிர மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மராட்டிய முன்னாள் முதல்வர் ஏ.ஆர். அந்துலே, மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி ஆகியோரின் பெயர்களும் கட்டணம் செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
விரைவில் நடவடிக்கை....
குடிநீர் கட்டணம் செலுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விரைவில் பரிசீலனை செய்ய இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.