வினோத் காம்ப்ளியை காணவில்லை! கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி
மும்பை: சச்சின் நண்பர், வினோத் காம்ப்ளிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி காம்ப்ளியையும், அவரது மனைவியும் காணவில்லை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது தோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி. சச்சின் தலையிட்டு காம்ப்ளியை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பவே அப்படி..
பள்ளி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பள்ளித்தோழர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில், 664 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர். 1988ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில், 1991ம் ஆண்டு சார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார்.
மாரடைப்பால் பாதிப்பு
இந்தியாவுக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள காம்ப்ளி 2009ம் ஆண்டில் ஓய்வு முடிவை அறிவித்தார். மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் காம்ப்ளிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம், மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
காம்ப்ளியை காணவில்லையா..?
இந்நிலையில் மராத்தி செய்தித்தாள் ஒன்றில் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ஆகியோரின் புகைப்படத்தை பிரசுரித்து, அவர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கி
இந்த விளம்பரத்தை டோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா குறித்து தகவல் தெரிந்தோர், வங்கியை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடன் பாக்கி
இந்த வங்கியில் இருந்து காம்ப்ளியும் அவரது மனைவியும் கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.