மும்பை கோர்ட் அனுமதி- விறுவிறுப்படையும் லலித் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகள்!
லலித் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பை: லண்டனில் பதுங்கியுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை நாடு கடத்தக் கோரி இங்கிலாந்துக்கு கடிதம் அனுப்ப அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஐபிஎல் தலைவராக லலித் மோடி இருந்த போது நிதி மோசடியில் ஈடுபட்டார் என்பது பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வாரண்ட் உத்தரவை செயல்படுத்துவதற்காக, லலித் மோடியை நாடு கடத்தக் கோரி இங்கிலாந்துக்கு கடிதம் அனுப்ப அனுமதி கேட்டிருந்தது அமலாக்கத் துறை. இக்கோரிக்கையை ஏற்றது மும்பை சிறப்பு நீதிமன்றம்.
தற்போது லலித் மோடியை ஒப்படைக்க கோரி இங்கிலாந்துக்கு கடிதம் அனுப்ப நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வருகை தந்த போது மல்லையா, மோடி உள்ளிட்ட தப்பி ஓடிய குற்றவாளிகளை ஒப்படைக்க பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் இனி லலித் மோடியை நாடு கடத்த கோரும் நடவடிக்கைகள் விறுவிறுப்படையும்.