”அட்டாக்” பாண்டியை மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்த அவகாசம் வழங்கியது பெலாபூர் கோர்ட்!
மும்பை: மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை வரும் 26 ஆம் தேதிக்குள் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெலாபூர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டில் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அட்டாக் பாண்டி தலைமறைவானார்.
இதனையடுத்து அட்டாக் பாண்டியை தேடப்படும் குற்றவாளியாக மதுரை நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான வஷியில் அம்மாநில போலீசார் உதவியுடன் மதுரை சிறப்புப்பிரிவு காவல்துறையினர் அட்டாக் பாண்டியை கைது செய்தனர்.
பின்னர் அவரை பெலாபூர் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வரும் 26 ஆம் தேதிக்குள் மதுரை நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த பெலாபூர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில் தமிழக டி.ஜி.பி, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் தென்மண்டல ஜ.ஜி ஆகியோருக்கு அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமது கணவரை என்கவுன்டரில் கொல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், அவரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.