சோனியா காந்தியின் இடது தோள்பட்டையில் ஆபரேஷன்!
டெல்லி: உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு இடது கை தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, முன்கூட்டியே அங்கு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வாரணாசி நகரில் சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
உடல்நலக் குறைவு...
காரில் ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோனியா காந்திக்கு தோள்படையில் காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சோனியா காந்தியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தீவிர சிகிச்சை...
அதனைத் தொடர்ந்து உடனடியாக தனி விமானம் மூலம் அவர் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா, பின்னர் மேற்கு டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஆபரேஷன்...
தீவிர மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அவருக்கு இடது தோள்பட்டையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் ஆபரேஷன் நடந்ததாக தகவல் வெளியானது. மும்பையைச் சேர்ந்த தோள்பட்டை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் சஞ்சய் தேசாய், பிரதீக் குப்தா ஆகியோர் சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலும்பு முறிவு...
இந்த அறுவைச் சிகிச்சைக் குறித்து மருத்துவர் தேசாய் கூறுகையில், "சோனியாவிற்கு இடது கை தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவோடு சிறிய விலகம் ஆகி இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிசியோதெரபி...
சோனியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற உள்ள சோனியாவிற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மோடி...
சோனியாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், விரைவில் அவர் முழுமையாக குணமடைவார் என்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஷீலா தீட்சித், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சோனியாவின் உடல்நலம் குறித்து ஷீலா தீட்சித்தை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. தனது டிவிட்டர் பக்கத்திலும் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.