மகனை கொலை செய்ய இந்திராணி ரூ.2.5 லட்சம் கொடுத்த கூலிப்படை நபர் கைது
மும்பை: இந்திராணி முகர்ஜி தனது மகன் மிகைல் போராவை கொலை செய்ய தொடர்பு கொண்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்தார். இந்திராணி தனது கணவர் பீட்டரிடம் மகள் ஷீனாவை தங்கை என்றும், மகன் மிகைல் போராவை தம்பி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திராணி தனது மகனையும் தீர்த்துக் கட்ட முயற்சி செய்துள்ளார்.
மிகைல் போரா
இந்திராணி தனது மகன் மிகைல் போராவை கொலை செய்ய கூலிப்படையைச் சேர்ந்த ஒரு நபரை அணுகியுள்ளார். இந்நிலையில் மும்பை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பணம்
மிகைல் போராவை கொலை செய்ய இந்திராணி அல்லது அவரது உதவியாளர் கூலிப்படை ஆளுக்கு ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. அந்த நபர் மிகைலை கொலை செய்யும் திட்டம் செயல்வடிவம் பெறவில்லை.
இந்திராணி
மிகைல் போராவை கொலை செய்ய தனக்கு உத்தரவிட்டது இந்திராணி முகர்ஜி தான் என அந்த கூலிப்படை நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி
இந்திராணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூலிப்படை நபரை வைத்து மிகைலை கொலை செய்ய திட்டமிட்டார். இந்திராணி மிகைலை கொலை செய்ய நான்கு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார்.
ஷீனா
இந்திராணி ஷீனாவை கொலை செய்யும் முன்பு தனது மகனுக்கு குளிர்பானத்தில் போதைப் பொருளை கலந்து கொடுத்துள்ளார். ஆனால் மிகைல் அதை குடிக்காமல் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார்.
குற்றம்
இந்திராணி இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது அவர் மீது மிகைலை கொலை செய்ய முயன்ற குற்றம்சாட்டப்படும் என்று தெரிகிறது.