மும்பை விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆனது!!
மும்பை: மும்பையில் விஷச் சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது.
மும்பை மலாட் பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு சிலர் சட்டவிரோதமாக விஷச் சாராயம் விற்பனை செய்தனர். இந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் தாங்க முடியாமல் அவர்கள் சுருண்டு விழுந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். தற்போது விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 84-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு புறநகர் பகுதியான விக்ரோலி பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 87 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.