‘இனிப்பும் புளிப்புமான’புதிய உலக சாதனை... 25 விநாடிகளில் 95% கெட்சப் பாட்டிலைக் காலி செய்த இந்தியர்!
குறைந்த நேரத்தில் அதிகளவு கெட்சப் குடித்தவர் என்ற புதிய உலக சாதனையை மும்பையைச் சேர்ந்த தினேஷ் சிவ்நாத் செய்து முடித்துள்ளார்.
மும்பை: ஒரு முழு தக்காளி கெட்சப் பாட்டிலில் 95% கெட்சப்பை 25 செகண்டில் குடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் மும்பையைச் சேர்ந்த தினேஷ் என்பவர்.
இந்தியர்கள் எத்தனையோ விதமான சாதனைகளைப் புரிந்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். அவற்றில் சில வேடிக்கையாகவும், சில விநோதமாகவும் இருக்கும். அந்தவகையில் வேடிக்கையான புதிய உலக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது மும்பையில்.
மும்பையைச் சேர்ந்தவர் தினேஷ் சிவ்நாத் உபாத்யாய. இவர் 396 கிராம் கெட்சப் பாட்டிலில் இருந்த தக்காளி கெட்சப்பில் 95 சதவீதத்தை வெறும் 25.37 செகண்ட்களில் குடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸ்ட்ரா பயன்படுத்தி இந்தச் சாதனையை தினேஷ் செய்துள்ளார். கின்னஸ் ரெக்கார்டிற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை என்பதால், கண்ணாடி பாட்டிலில் செய்யப்பட்ட இந்த சாதனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ, கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் யூ டியூப் பக்கத்தில் கடந்த 9ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை இதனை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இது போன்ற விநோதமான சாதனைகளைச் செய்வது தினேஷிற்கு முதன்முறையல்ல. ஏற்கனவே அவர், 'கிரேப் புரூட்டை மிக வேகமாக உரித்து தின்பது, 3 நிமிடங்களில் அதிகளவு திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது, 3 நிமிடங்களில் அதிகளவு ஆரஞ்சுப் பழங்களை உரித்து தின்பது’ போன்ற சாதனைகளைச் செய்துள்ளார்.
“இந்த அற்புதமான உலகில் என்னைப் பற்றி மற்றவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டும் என்றே இந்தச் சாதனையைச் செய்தேன்” என தன் சாதனைக் குறித்து தினேஷ் தெரிவித்துள்ளார்.