'கே' பையனுக்கு ஏற்ற மணமகன் தேவை: புதுமைத் தாயின் அதிரடி விளம்பரம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த பத்மா ஐயர் என்பவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஏற்ற மணமகன் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த (பூர்வீகம் பாலக்காடு) பத்மா ஐயரின் மகன் ஹரிஷ் ஐயர். 36 வயதாகும் ஹரிஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். யுனைடெட் வே ஆப் மும்பை என்ற என்ஜிஓவின் தலைவராக உள்ளார்.
தனது மகன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த பத்மா பதறிவிடாமல் மகனுக்கு ஏற்ற மணமகனை தேடி வருகிறார். அவர் இது குறித்து விளம்பரமும் அளித்துள்ளார்.
அதில், 25-40 வயது வரை உள்ள செட்டில் ஆன, விலங்குகளை நேசிக்கும், சைவப் பிரியர் பையன் (ஜாதி பொருட்டல்ல - ஆனால் ஐயராக இருந்தால் விருப்பத்துக்குரியது) தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த விளம்பரம், இயல்பான ஒன்றுதான், தனது மகனின் ஆசாபாசங்களுக்கு பத்மா ஐயர் கெளரவம் கொடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து பத்மாவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில்,
ஹரிஷ் எனது நிலையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதால் இதை போஸ்ட் செய்கிறேன். இல்லை என்றால் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஓரினச்சேர்க்கையாளர்களின் தாய்மார்கள் ஒன்றும் மகான்கள் இல்லை. அவர்களுக்கும் பிற தாய்மார்களை போன்று பாரபட்சம் எண்ணம் இருக்கலாம்.
ஐயர் பையன் தான் வேண்டும் என்பது டீஸ் செய்வதற்கு அல்ல. நமக்கு தெரிந்த கலாச்சாரத்து வீட்டில் நம் பிள்ளைகள் திருமணம் செய்வதையே தாய்மார்கள் விரும்புவார்கள்.
என் சகோதரி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். என் இரண்டாவது மகன் அசைவம் சாப்பிடும் மகாராஷ்டிரா பெண்ணை மணந்துள்ளார். என் உறவினர் மகள் கிறிஸ்தவரை திருமணம் செய்துள்ளார். அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகிறார்கள். என் மகனுக்கு வரப் போகும் பையனின் மதம் அல்லது ஜாதி பற்றி எனக்கு கவலை இல்லை. என் மகன் போடும் கன்டிஷன்களுக்கு அவருக்கு விரைவில் ஒரு பையன் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
58 வயதாகும் பத்மா முன்னதாக ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான திருமண ஃபோரம் ஒன்றை துவங்க நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. பத்மா அளித்துள்ள விளம்பரத்தை பார்த்து 2 பையன்கள் ஹரிஷை தொடர்பு கொண்டுள்ளனர்.
என் திருமணம் சைவ முறைப்படி நடக்கும் என்று நினைக்கிறேன். என் திருமணத்தில் அனைத்து மதம் மற்றும் ஜாதிகளின் கலாச்சாரமும் கலந்திருக்கும் என ஹரிஷ் தெரிவித்துள்ளார்.