அரசியல்ல குதிச்சு நாட்டுக்கு ஏதாவது செய்யணும்... பதவியை ராஜினாமா செய்த மும்பை கமிஷ்னர்
மும்பை: அரசியலில் பிரவேசித்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆவலில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மும்பை கமிஷ்னர் சத்யபால் சிங்.
1980ம் ஆண்டு ஐபிஎஸ் பட்டத்தைப் பெற்றவரான சத்யபால் சிங், மும்பை நகர போலீஸ் கமிஷ்னராக பதவி வகித்து வந்தார். நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சத்யபால். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஓப்புதல் பெறுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலுக்கு அனுப்பி உள்ளார்.
வரும் 2015ம் ஆண்டு அவரது பதவிகாலம் முடிந்து ஓய்வுபெறும் நிலையில் தற்போது சத்யபால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது ராஜினாமா முடிவு குறித்து கேட்கப் பட்டதற்கு, ‘நான் அரசியலில் பிரவேசித்து நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறேன். நான் எந்தக் கட்சியில் சேர்வது என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் அது குறித்தான அறிவிப்பு வெளியாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
சத்யபால், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.