மும்பை கனமழைக்கு 5 பேர் பலி... இன்றும் மிரட்டவுள்ள அடைமழை
மும்பையில் கனமழைக்கு 5 பேர் பலியாகிவுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை: மும்பையில் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மும்பையில் கடந்த இரு தினங்கள் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மும்பையில் கனமழையால் செவ்வாய்க்கிழமை வீடு இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் தானேவில் 2 பெண்களும் மழைக்கு உயிரிழந்துவிட்டனர். இருவர் காயமடைந்தனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. அது இன்று மதியம் குஜராத்தை நோக்கி சென்று அரபிக் கடலை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போகும்போது மிகவும் கனமழையுடன் ஒரு பிரளயத்தையே உண்டுசெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று்ம பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை பல்கலைக்கழகத்துக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலையுடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின்சார துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட மிகவும் முக்கிய துறைகளில் பணியாற்றுவோர் மட்டும் இன்று பணியாற்றுவர். ஏனையவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.