ஆண் குழந்தைக்குத் தாயானார் மும்பையின் முதல் “டெஸ்ட் டியூப் பேபி” ஹர்ஷா!
மும்பை: மும்பையில் முதன்முறையாக டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு சிகிச்சை மூலமாக பிறந்த பெண் தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மணி செளதா என்ற பெண்ணுக்கு கடந்த 1986 ஆம் ஆண்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறந்தது. நாட்டின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை என்ற பெருமை அதற்கு கிடைத்தது. இக்குழந்தைக்கு ஹர்ஷா செளதா என பெயரிடப்பட்டது. தற்போது 30 வயதாகும் அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கருத்தரித்த ஹர்ஷா செளதா மும்பை மருத்துவமனையில் நேற்று அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது தாயார் மணி செளதாவுக்கு பிரசவம் பார்த்த இந்துஜா என்ற அதே மருத்துவரே ஹர்ஷாவுக்கும் பிரசவம் பார்த்தர்.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக பின்னர் அவர் தெரிவித்தார். இக்குழந்தை சுமார் மூன்றேகால் கிலோ எடையுடன் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர் இந்துஜா கூறினார். தாம் தாயானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஹர்ஷா தனக்கும், தனது தாய்க்கும் சிகிச்சை அளித்த மருத்துவர் இந்துஜா தனக்கு 2வது தாய் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.