விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மும்பை கிங் சர்க்கிள் விநாயகர் சிலை ரூ. 259 கோடிக்குக் காப்பீடு
மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜி.எஸ்.பி. சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பிக் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ரூ. 259 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், மும்பையில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக மிகப்பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், ஜி.எஸ்.பி., சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில் கிங் சர்க்கிள் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்கள்...
ஜி.எஸ்.பி. சேவா மண்டல் அமைப்பின் சார்பில் மும்பை கிங் சர்க்கிள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைக்கு, 22 கோடி ரூபாய் மதிப்பில், 80கி தங்க, வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டுள்ளன.
லாக்கர்...
அந்த விநாயகரை கடலில் கரைக்கும் முன், அதில் உள்ள ஆபரணங்கள் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்படும்.
பாதுகாப்பு...
விநாயகர் சதுர்த்தி பூஜை துவங்கிய நாள் முதல், சிலை கரைப்பு நடைபெறும் நாள் வரை, இந்த விநாயகர் சிலைக்கு, இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவர்.
காப்பீடு...
இந்த சிலை மற்றும் பக்தர்கள், மண்டபம் போன்ற அனைத்து விதமான பாதுகாப்புக்கும் சேர்த்து, 259 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தீ, வெள்ளம், பயங்கரவாதிகள் தாக்குதல், இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துகளை குறிப்பிட்டு, இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு...
மண்டல் மற்றும் மண்டல் பராமரிப்புக்கான தன்னார்வ தொண்டர்கள் சார்பில் நாள் ஒன்றுக்கு ரூ.51 கோடியே 70 லட்சம் என்ற அளவில் இதுவரை 5 நாட்களுக்கு காப்பீடு செய்து உள்ளனர். இதன்படி, இந்த விநாயகர் சிலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், காப்பீடு செய்துள்ள நிறுவனம், 259 கோடி ரூபாயை, ஜி.எஸ்.பி., சேவா மண்டலுக்கு வழங்கும்.
கடந்தாண்டு...
கடந்த ஆண்டு விநாயகர் சிலை ரூ.223 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. கிங்சர்க்கிள் கணபதி சிலை 5 நாட்கள் மட்டும் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின் கடலில் கரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.