மும்பை: பட்டப்பகலில் இளம்பெண் மானபங்கம்: 6 பேர் கைது
மும்பை: மும்பையில் பட்டப்பகலில் 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமையன்று 18 வயது இளம்பெண் தனது தோழியுடன் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்து ஹிந்துஸ்தான் நாகா பகுதியிலிருந்து ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோ ஓட்டுனருக்கு கொடுக்க போதிய பணம் இல்லாதால், தோழி தனது உறவினர் வீட்டிற்கு பணம் வாங்க சென்றுவிட்டார்.
தனியாக ஆட்டோவில் இருந்த இளம்பெண், தோழி வர தாமதம் ஆனதால் அவரை தேடிச் செல்ல முயன்றார். அப்போது, பணம் கொடுத்தால்தான் விடுவேன் என்று ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள் அங்கு வந்து இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்து சீண்ட ஆரம்பித்தனர். அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடி, அருகிலிருந்த உணவகத்திற்குள் சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், ஒருவரும் உதவி செய்யவில்லை.
பின்னர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் சேர்ந்து அந்த பெண்ணை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ் அகமத் கான், சரோஜ் கான், நவ்சாத் கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.