188 பேரை பலி கொண்ட மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு- இன்று 12 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!
மும்பை: மும்பையில் 188 பேரை பலி கொண்ட ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் 12 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி வெவ்வேறு வழித்தடங்களில் சென்ற 7 மின்சார ரயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளில் சக்திவாய்ந்த குண்டுகள் சில நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 188 பேர் பலியானார்கள். 829 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டதாக சிமி இயக்கத்தைச் சேர்ந்த கமல் அகமது அன்சாரி (வயது 37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் சேக் (36), எக்தேசாம் சித்திக் (30), முகமது மஜித் சபி (32), சேக் ஆலம் (41), முகமது சலீம் அன்சாரி (34), அப்துல் வஹீத் சேக் (34), முசாம்மில் சேக் (27), சொகைல் முகமது சேக் (43), சமீர் அகமது சேக் (36), நவீத் உசைன் கான் (30) மற்றும் ஆசிப் கான் (38) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
9 ஆண்டுகள் நடந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி தீர்ப்பளித்தது. அப்துல் வஹீத் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். இவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட போது 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் 8 பேருக்கு தூக்கு தண்டனையும் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் குற்றாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரங்களை மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவிக்கும் எனத் தெரிவித்திருந்தது. மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று இருதரப்பும் தண்டனை குறித்த வாதங்களை முன்வைத்தனர். இதனால் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இன்று இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர் 12 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும். இதையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.