மோடி சாதனையை முறியடித்த பிரீதம் முண்டே... சுமார் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகளான பிரீதம் முண்டே 6 லட்சத்து, 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபிநாத் முண்டே. இவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற சில தினங்களில் டெல்லியில் நடந்த சாலை விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கடந்த 15ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலுடன், பீட் லோக்சபா தொகுதிக்குமான இடைத் தேர்தல் நடைபெற்றது. பீட் தொகுதியில், பாஜக சார்பில் மறைந்த கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே களமிறக்கப் பட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் அசோக் பாட்டீல் போட்டியிட்டார்.
அமோக வெற்றி...
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப் பட்டன. அதன்படி, பீட் தொகுதியில் பிரீதம் முண்டே 9 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, அசோக் பாட்டீலுக்கு 2 லட்சத்து 24 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
புதிய சாதனை...
இதையடுத்து, 6 லட்சத்து 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிரீதம் முண்டே புதிய சாதனை படைத்துள்ளார்.
பழைய சாதனை...
இதற்கு முன்னர், கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அணில் பாசு 5 லட்சத்து, 92 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பிரீதம் முண்டே முறியடித்துள்ளார்.
3வது இடத்தில் மோடி...
இதன் மூலம் கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு, 5.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடியின் சாதனை மூன்றாவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.
வாழ்த்து...
புதிய சாதனை படைத்த பிரீதம் முண்டேவுக்கு பாஜக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.