மூணாறு கண்ணன்தேவன் கம்பெனிக்கு எதிராக தேயிலை தோட்ட தமிழ் தொழிலாளர்கள் கிளர்ச்சி! அதிர்ந்த சங்கங்கள்!
மூணாறு: கேரளா தேயிலை தோட்ட வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தொழிலாளர்களே ஒன்று திரண்டு போனஸ் கோரி போராட்டம் நடத்தி தொழிற்சங்கங்களை அலற வைத்துள்ளனர்.
மூணாறில் உள்ள டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான கண்ணன் தேவன் தேயிலைக் கம்பெனியில் சுமார் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும் சுமார் 90 ஆயிரம் முறைசாரா தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
இவர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.231 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை ரூ.500-ஆக உயர்த்தக் கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு 10% போனஸ் வழங்கப்படும் என கண்ணன் தேவன் தேயிலை நிர்வாகம் அறிவித்தது. தொழிலாளர்கள் இதை ஏற்க மறுத்தனர்.
ஆனால் கண்ணன் தேவன் நிறுவனத்துக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் அறிவிப்பை நியாயப்படுத்தின. இது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தொழிற்சங்கங்கள் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பது தொழிலாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் தொழிலாளர்களே ஒன்று திரண்டு கடந்த 9 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அத்துடன் கண்ணன் தேவன் நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் பெற்று வரும் காங்கிரஸ், இடதுசாரி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பட்டியலை ஆதாரத்துடன் தொழிலாளர்கள் வெளியிட்டனர்.
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அலறத் தொடங்கினர் தொழிற்சங்கத் தலைவர்கள். இதனைத் தொடர்ந்து போராட்ட களத்துக்கு வந்த மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன், வணக்கம் என்று கூறி தமிழில் பேச்சைத் தொடங்கியதுடன் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனம் ஒரு பிராடு நிறுவனம் என்றெல்லாம் ஏகத்துக்கும் தாக்கிப் பேசினார். ஆனாலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் மீதும் அதிருப்தியில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் யாரையும் நம்புவதாக இல்லை.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கும் கேரளா முதல்வர் உம்மன்சாண்டிக்கு இடையே கொச்சியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப இருக்கின்றனர்.
தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் தொழிற்சங்கங்களை அலற வைத்துள்ளன.