நீதிபதி மீது ஷூவை வீசிய கொலைக் குற்றவாளி: பூஜ் நீதிமன்றத்தில் பரபரப்பு
அகமதாபாத்: தீர்ப்பெழுத தயாரான நீதிபதி மீது கொலைக் குற்றவாளி ஒருவர் தனது ஷூவை கழற்றி வீசித் தாக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து குற்றவாளியின் தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டதாக நீதிபதி அறிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினர் ஒருவரைக் கொன்றா வழக்கில் கைதானவர் கசம் அகமட் என்பவர். இவர் மீது கொலை வழக்கு தொடரப் பட்டு பூஜ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்க நீதிபதி எம்.டி.ஆச்சார்யா தயாரான போது, திடீரென விசாரணைக் கூண்டில் இருந்த குற்றவாளி தனது ஷூவைக் கழட்டி நீதிபதி மீது வீசினார். ஆனால், அது நீதிபதி மீது படாமல் தவறிக் கீழே விழுந்ததால், தகாத வார்த்தைகளைக் கூறிக் கொண்டே தனது மற்றொரு ஷூவைக் கழட்டி நீதிபதி மீது வீச முயற்சித்துள்ளார்.
ஆனால், அதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார் தாக்குதலைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப் படுவதாக நீதிபதி அறிவித்தார்.