உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க அனுமதி... மோடிக்கு கடிதம் எழுதிய முருகன்
உண்ணாவிரதம் இருப்பது குறித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார்.
தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக நளினியிடம் முருகன் தெரிவித்தார். இதன்படி, கடந்த ஐந்து நாட்களாக முருகன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார். சிறைத்துறையின் மூலம் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், முருகனை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சிறையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து முருகன் யாருடனும் பேசாமல் எந்த வித உணவும் உட்கொள்ளாமல் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறார்.
சிறை அதிகாரிகள் விரதத்தை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்த வருவதாக என்னிடம் எழுத்து மூலம் தெரித்தார்.
மேலும், தான் எதற்காக ஜீவ சமாதி அடைய போகிறேன் என்ற விரிவான காரணங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறை அதிகாரிகள் மூலம் கடிதம் வயிலாக தெரிவித்துள்ளதாக எழுத்து மூலம் விளக்கினார்.
முருகன் தற்போது சோர்வாக இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுள் எனக்கு கட்டளையிட்டால் தான் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார். இதனிடையே பிரதம் மோடிக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
முருகன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:
பரமபுருஷனான கிருஷ்ணனின் தீவிர பக்தன் நான். கிருஷ்ணனான பரம புருஷனை அடைய தீவிர ஆன்மீக பயிற்சி நடந்து வருகிறது. ஒரு பெருங்குற்றச்சாட்டிற்காக 26 வருடங்களாக தண்டனை பெற்று வருகிறேன்.
ஒருவேளை என்மீதான குற்றச்சாட்டினை உண்மை என்று எடுத்துக்கொண்டால் கூட நான் தண்டனையை அனுபவித்து விட்டேன்.
இவ் உடலை விட்டு உயிர் பிரிந்து இருக்க விரும்புகிறது. இறைவனிடம் சங்கமமாக முடிவு செய்துள்ளது.
இந்து மதத்தில் ஜீவசமாதி அடைதல் மரபு பல ஆண்டுகளாக உள்ளது. அதேபோல தமிழர்கள் மரபில் வடக்கு இருத்தல் என்பது மரபு.
04-07-17 ஆம் தேதி முதல் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்கிறேன். 19-07-2017 ஏகாதசி முதல் நான் விரதம் இருக்கிறேன். தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பினேன். 18 -08-2017 முதல் அனைத்து உணவினையும் நிறுத்தி விட்டேன். எனது பயணத்திற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யாமல் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முருகன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.